புதியவை

திங்கள், 29 அக்டோபர், 2012

பொக்கிஷங்கள்


1.பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்!
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்!
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
6. நான் குறித்த நேரத்திற்கு கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்!
12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்!
13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்!
14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை!
15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்!
16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்!
17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!
18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்!
19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்!
20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்!
21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்!
22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.
24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்!
25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்!
26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்!
27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்!
28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்!
31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்!
32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
நன்றி:பொக்கிஷங்கள்.காம்

புதன், 17 அக்டோபர், 2012

விமர்சையாக நடைபெற்ற ஹாஜிகள் வழியனுப்பும் விழா


oppilan
அல்லாஹ்வின் அருளால் நமது ஒப்பிலானிலிருந்து இவ்வாண்டு 4 நபர்கள் புனித ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர். நேற்று அவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

கடந்த சில ஆண்டுகளாக உலக அளவில் மட்டுமல்ல.. நம் ஒப்பற்ற ஒப்பிலானிலும் புனித ஹஜ் பயணத்தில் அதிகமானோர் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் கடந்த வருடம் 8 பேர் ஹஜ் செய்தது நாம் அனைவரும் அறிந்த செய்தி. இந்த வருடம் பலரும் நாட்டம் கொண்டிருந்தாலும் அந்த பாக்கியம் கிடைத்ததென்னவோ நான்கு பேருக்குத்தான்.

1. ஜனாப் ஜமால்தீன் அவர்கள்
2. அவர்களின் துணைவி உஸ்வான் பீவி அவர்கள்
3. ஜனாபா. தாஜுன் பீவி (W/O மர்ஹூம் யாசீன்) அவர்கள் 
4. ஜனாபா. காதர்ஜான் பீவி அவர்கள்

இவர்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நம் பள்ளியில் நடைபெற்றது. அதில் ஜமாத்தார்களும் வாலிபர்களும் தாய்மார்களும் திரளாகக் கலந்துகொண்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. 

ஜனாப். உமர் கத்தாப் அப்பா அவர்களும் ஜமாஅத் தலைவர் ஜனாப் அப்துர் ரஹ்மான் அவர்களும் தலைமை தாங்க, 
மவ்லவி சதக்கத்துல்லாஹ் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்த் (தலைமை இமாம் , ஒப்பிலான்) அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

ஹாஜி. இபுராமுசா அவர்கள் மணிமாலை ஒன்றை அணிவித்து ஹஜ்ஜுக்கு செல்வோரை வாழ்த்தினார். பொன்னாடையும் அணிவித்து கவுரவிக்கப்பட்டது. முன்னதாக, சாயல்குடியிலிருந்து சென்னை செல்லும் அமர்நாத் பஸ் ஒப்பிலானுக்கே வரவழைக்கப்பட்டு தயாராக இருந்தது. பள்ளியிலிருந்து பஸ் வரைக்கும் மக்கள் திரள், கொட்டும் மழையிலும் கூட்டம் கூட்டமாக வந்து சலாம் சொல்லி கண்ணீர் மல்க வழி அனுப்பிவைத்தது மறக்கமுடியாத நிகழ்வு.